ஒரு வேலியின் வேட்டை!
ஒரு வேலியின் வேட்டை!
வேலிகள் விலை போய் வெகு காலம் ஆகிவிட்டது!
அலங்கோலங்கள் அதிகமாகிவிட்டதே அதற்கு சான்று.
அலங்கோலங்களை இருட்டடிப்பு செய்தும் அதையே பொற்காலம் என பிதற்றியும்,
தான் விலை போனதை அது மறைத்திட எத்தனிக்கிறது!
அலங்கோலங்களுக்கு உற்றத் துணையாய் அநியாயங்களும் விழாக்காலம் காண்கின்றன!
இது தேரோடும் விழா அல்ல உரிமைகளை கூறு போடும் விழா!
மேளங்கள் கேட்பதில்லை மாறாக மிதிப்பட்ட சமத்துவத்தின் ஓலங்கள் தான் கேட்கின்றன!
சுயநலம் அது பரிவட்டம் கட்ட,
பிழைப்பு வாத அனுகூலம் ஒளிவட்டம் கூட்ட,,
இறுமாப்புடன் இருப்பதை கெடுத்து அழிக்கும் காட்டாட்சியின் விழா!
காவல் இருக்கிறேன் என்று ஆசை மொழி பேசி விட்டு,
முதுகில் குத்தும் மோசடிக்காரர்களே படி அளந்தால் என்ன ஆகும்?
உரிமைகள் பறிபோகும் திறமைகள் தீக்கரையாகும்!
கடமைகள் கை கழுவப்பட கொடுமைகள் கையளிக்கப்படும்!
ஏழ்மையை துட்சமென மதித்து தனிப்பட்ட செழுமைக்கு சாமரம் வீசப்படும்!
சமத்துவ நேர்மையை நிர்மூலமாக்கி ஏற்றத்தாழ்வு வன்மங்கள் வளர்த்தெடுக்கப்படும்!
நன்மைகள் விளைந்திடும் இளையோரின் கல்வியை ஊழல் பொய்மைகள் பெருகிடும் ஊழலின் வசம் சேர்க்கப்படும்!
திராவிட காவல் இருக்கிறது என்று போரிடாமல் இருந்ததற்கு,
உயர்கல்வியை வேருடன் பிடித்தெறியும் ஊரினை அல்லவா அகம்பாவத்துடன் செய்கிறது!
கொள்கை தெரிந்தவன் என்று ஆட்சி செங்கோலினை கொடுத்தாள்,
குரங்கிடம் கொடுத்த மாலையாக அல்லவா அறுத்தெறிந்து அதிகார வெறியுடன் தாவுது!
நற்குண கொடையாளர்கள் தந்த இடத்தை,
அறக்கத்தன தனியாரிடம் மடைமாற்ற சட்டம் தந்த இந்த தினத்தை,
பரிசென கொடுப்பதற்கா குழைந்து குழைந்து ஆள வருமுன் பேசினர்,
அரசு வேலைகளை கொடுப்பதற்கு அல்ல கொடுத்த அத்தனையும் பறிப்பதற்கா,
இனிக்க இனிக்க நம் இடம் தேடி ஐயோ இன்முகத்துடன் வந்தனர்!
பதவியை ஏர்த்தது சமூக நீதியை பாதுகாக்க என நினைத்திருந்தால்,
சகல மரியாதைகளும் அணிவகுக்க அனுபவித்து பொழுதுபோக்க தான் என்பது இன்றல்லவா புரிகிறது!
நிதி பற்றாக்குறை என்று நாள் தவறாமல் பேசியதில் எள்ளளவும் உண்மையில்லை,
நீதி பற்றாக்குறை தான் கொடுங்கோல் மனசில் குவிந்து இருந்திருக்கிறது,
என்பதை விளங்கிக் கொள்ளும் போது விடியல் தருகிறேன் என்று பேசியதில் இருந்த அரசியல் நன்கு விளங்குது!
மாற்றம் தருகிறேன் என்று மாறு தட்டி பேசியதெல்லாம்,
மாணவ ஆசிரியரின் ஏற்றம் பறித்து நிகழ்த்துவதை தானா!
தலைமுறைகளுக்கு தாராள கல்வி தந்த நிலங்களின் முதுகெலும்பை,
உடைத்து நொறுக்கி கெடுக்கிற செயலை செய்வதை தானா!
உங்களைக் காத்திடுவேன் என கைகட்டி கண்கள் பணிந்து பேசியதெல்லாம்,
அப்படியே அயலானிடம் ஒப்படைக்கும் அருவெறுப்பின் கோர முகத்தை காட்டிடத் தானா!
தன்னை நம்பிய பயிர்களை பழுப்பேரி பாழாக விட்டுவிட்டு,
வேடிக்கை பார்க்க தான் விலகிக் கொண்டாயா எங்களை ஆளும் வேலியே!
நாம் காத்து நின்ற கன்றுகளை எல்லாம் கரையான்கள் தின்னவிருக்கிறது,
என்பதை நன்கு கண்டுணர்ந்த பின்பு தான்,
இனி காவல் இருக்க வேண்டாம் என பின்னங்கால் வைத்தாயா அதிகார மமதை கொண்ட மதிலே!
இவன்.
கவிஞர்,
வெண்கோலன்!
Comments
Post a Comment